Sunday, December 14, 2008
சிரிப்போம்! ....சிறப்போம்!!
- கிரிஜா மணாளன்
ஆசிரியர்/"மகிழ்ச்சி"
Friday, October 17, 2008
மாமன்னன் "இழிகுலவர்மன்"!
அரசவையில் இருந்தாலும், வேறு எந்த இடங்களில் இருந்தாலும் பணியாட்களை அழைக்க :யாரங்கே? யாரங்கே?” என்று கர்ஜிக்கும் தங்கள் மன்னர் திடீரென்று தன் பழக்கத்தை மாற்றிக்கொண்டு விட்டாரே, என்ன காரணம்? என்று அமைச்சரும், தளபதியும் தங்களுக்குள் கிசு கிசுத்துக் கொண்டி ருந்தார்கள். அதன் காரணத்தை அறிய அரண்மனைப் பணியாளன் ஒருவனையே விசாரித்து விடுவது என்று முடிவு செய்த அவர்கள் ஒருவனை அழைத்துக் கேட்டார்கள்.
அவன் சொன்னான்: “ஐயா! மன்னர் பள்ளியறைக்குள் நுழையும்வரை அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்பவன் நான். நேற்று பள்ளியறைக்குள் மன்னர் நுழையும்முன் தன் காலணிகளைக் கழற்றித் தருவதற்கு என்னை அழைப்பதற்காக “யாரங்கே? யாரங்கே?” என்று சத்தமிட்டார். அவ்வளவு தான், அவர் சத்தத்தைக் கேட்டு யாரோ இரு ஆண்கள் மகாராணியின் பள்ளியறைக்குள்ளிருந்து வெளியே தப்பியோடியதை நானே கண்டேன்!”
தம் தலையிலடித்துக்கொண்டு நகர்ந்தார்கள் அமைச்சரும், தளபதியும்!
- கிரிஜா மணாளன்
Thursday, October 9, 2008
எனக்கே செட்' ஆகலே!
Tuesday, September 23, 2008
ஒரு சர்தார்ஜி, தன் மனைவியோடு ஹோட்டல்ல காபி சாப்பிட்டுக்கிட்டு இருந்தார். சூடான காபியை குடிக்கமுடியாம, மனைவி அதை ஆறவச்சுக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் அவளை கோபத்தோட கிள்ளி, "காபி ஆறிப்போறதுக்குள்ல குடிச்சுத்தொலைடி! அதோ போர்டுல என்ன எழுதியிருக்கான் பாரு, HOT coffee Rs.5/-, COLD Cofee Rs. 10/-. அஞ்சு ரூபா தண்டம் வச்சுடாதே சனியனே!"
- ஆர். ராஜ்குமார் ("மங்களம் மைந்தன்")
திருவெறும்பூர், திருச்சி 620013.
Monday, September 15, 2008
நன்றி! நன்றி!!
செப்.14, ஞாயிறன்று சென்னை அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் நிகழ்த்திய "நகைச்சுவை அரங்கில்" நமது நகைச்சுவை வலைத்தளங்கள் சார்பாகத் தயாரித்து வழங்கப்பட்ட மேற்காணும் இலவச இதழைப் பாராட்டிய சிறப்பு விருந்தினர் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி அவர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது இதயமார்ந்த நன்றி!
- கிரிஜா மணாளன்.
Sunday, September 14, 2008
வாழ்த்துகிறோம்!
சென்னை-அம்பத்தூர் நகைச்சுவை மன்றம் 14.09.2008 ஞாயிறன்று நிகழ்த்தும் நகைச்சுவை அரங்கில் "நகைச்சுவை வேந்தர்" திரு. பாக்கியம் ராமசாமி (ஜ.ரா.சுந்தரேசன்) அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். அம்பத்தூர் ரசிகர்களுக்குக் கிடைத்துள்ள இவ்வரிய வாய்ப்பினை அறிந்து, மகிழ்ந்து, அவர்களைப் பாராட்டுகிறோம்!
நகைச்சுவை மன்றத்தின் நிர்வாகக் குழு - குறிப்பாக நண்பர் திரு எஸ். சம்பத் ('சிரிப்பானந்தா') அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!
இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு வழங்க, "சிரிப்போம்! சிறப்போம்!!" என்னும் நகைச்சுவை இதழ் நமது வலைத்தளம் சார்பாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது.
- கிரிஜா மணாளன்.
Saturday, August 30, 2008
எங்களது இதயமார்ந்த நன்றி!
கடந்த 24.08.2008 அன்று 'உலக நகைச்சுவைச் சங்கத்தின் சென்னை மயிலாப்பூர் கிளையில் நிகழ்ந்த 'என்.எஸ்.கே. கலைவாணர் நினைவலைகள்' விழாவில், 'நகைச்சுவை வேந்தர்' தஞ்சை தாமு அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தளித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நகைச்சுவைப் படைப்பாளர்களான கிரிஜா மணாளன், மங்களம் மைந்தன் (திருவெறும்பூர் ஆர். ராஜ்குமார்) ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். திரு. கிரிஜா மணாளன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கென தயாரித்து வெளியிட்ட "நூற்றாண்டு கண்ட கலைவாணர்" என்னும் சிறப்பிதழ் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
"சென்னை டிராமா ஹவுஸ்" விவேக் ராஜகோபால் மற்றும் கலைஞர்கள் வழங்கிய நகைச்சுவை நாடகம் அரங்கத்தை அதிரவைத்தது.'குங்குமம்' வார இதழின் உதவி ஆசிரியர் திரு. வெ. நீலகண்டன் விழாவுக்கு வருகை தந்து, நிகழ்ச்சி முடியும்வரை ரசித்து, நகைச்சுவையாளர்களைப் பாராட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. பிரபல நகைச்சுவை வேந்தர் "பாக்கியம் ராமசாமி" அவர்கள் விழாவில் பங்கேற்ற நகைச்சுவையாளர்களைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.
நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்த மயிலை நகைச்சுவை சங்கச் செயலாளர் திரு ஹ்யூமர் வி. லட்சுமணன் அவர்களைப் பாராட்டுகிறோம்.
Wednesday, August 27, 2008
"தமிழிதழ்த் தேனீ" திரு. பட்டாபிராமன் அவர்களின் 'தொலைக்காட்சி நேர்காணல்'
எங்களது "உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத் திருச்சி மாவட்டக் கிளை"யின் நெறியாளரும், 40 ஆண்டுகளாக தமிழ் இதழ்களைத் திரட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கோண்டு, 7 நகரங்களில் இதழ்கள் கண்காட்சி நடத்திப் புகழ்பெற்றவரும், தற்போதைய இதழ்கள் பற்றி 3 தொகுப்புகளை வெளியிட்டுள்ளவரும், 26 ஆண்டுகளாக லயன் சங்கப் பணிகளாற்றிக் கொண்டுள்ளவருமான லயன், பொறிஞர், "தமிழிதழ்த் தேனீ" திரு. க. பட்டாபிராமன் அவர்களின் "நேர்காணல் நிகழ்ச்சி" கடந்த 24.08.2008 அன்று "மக்கள் தொலைக்காட்சி"யில் ஒளிபரப்பாகியது. நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தியவர் மதுரா டிராவல்ஸ் உரிமையாளர் திரு. டி.கே.டி. பாலன் அவர்கள்.
இதன் மறு ஒளிபரப்பு, 28.08.2008 அன்று பகல் 12 மணிக்கு "மக்கள் தொலைக்காட்சி"யில் நிகழ்கிறது.
அனைவரும் கண்டு ரசித்து, சாதனையாளர் திரு. பட்டாபிராமன் அவர்களை வாழ்த்த வேண்டுகிறோம்.
கிரிஜா மணாளன்
செயலாளர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.
சரசுவதி பஞ்சு
தலைவர்/திருச்சி மாவட்டக்கிளை
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கம்.
Tuesday, August 19, 2008
அன்புடன் வரவேற்கிறோம்!
24.08.2008, ஞாயிறு மாலை 04.30 மணியளவில், சென்னை மயிலாப்பூர் நகைச்சுவை மன்றம் வழங்கும் "கலைவாணர் என்.எஸ்.கே. நினைவலைகள்" நகைச்சுவை நிகழ்ச்சி, மயிலாப்பூர் ஆர். கே. மடம் சாலை, பி.எஸ். ஹையர் செகண்டரி ஸ்கூல் அரங்கில் நிகழவிருக்கிறது.
எங்கள் படைப்பாளர் அமைப்பின் நகைச்சுவை வேந்தர் திரு. தஞ்சை தாமு அவர்களும், நகைச்சுவையாளர் திரு. கிரிஜா மணாளன் அவர்களும் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
-------- உறுப்பினர்கள், உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் திருச்சி மாவட்டக் கிளை---------
Saturday, July 26, 2008
சிரிப்போம்! சிறப்போம்!!
Monday, June 30, 2008
உலக நகைச்சுவை தின வாழ்த்துக்கள்!
Sunday, June 1, 2008
Monday, May 19, 2008
Monday, May 12, 2008
ரிஸல்ட் எப்படி?
சாதாரண 'ஒத்தைத்தலைவலி'ன்னு ஒரு கிராமவாசி அந்த டாக்டர்க்கிட்ட போனார். டாக்டராகப்பட்டவர், அவரை உக்காரவச்சி, நிக்கவச்சி, படுக்கவச்சி படாதபாடெல்லாம் படுத்திவச்சு ஏதோ பெரிய மருத்துவ உண்மையை கண்டுபிடிச்சிட்ட மாதிரி, "வேற வழியே இல்லே! லாப்ல போயி எல்லா டெஸ்ட்டும் எடுத்தாகணும்!" என்றார்.
கிலி பிடிச்சிப்போன அந்த கிராமத்து ஆள், தன் நிலையையும், தலையையும் நொந்துகொண்டவராய் புறப்பட்டுப்போனார். அடுத்த நாள். எல்லா டெஸ்ட்டுக்களையும் எடுத்துக்கொண்டு வந்திருந்த அவர், அவற்றை டாக்டரிடம் கொடுக்க, அவற்றைப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கியபடி இவரை முறைத்தார்.
'என்னாச்சு டாக்டர், இதோட ரிஸல்ட் எப்படி இருக்கும்?..எனக்கு பயமா இருக்கு!" என்றார் கிராமவாசி. "ரிஸல்ட் படுமோசமாத்தான்யா இருக்கப்போவுது!........இந்த டெஸ்ட்டுக்களையெல்லாம் நான் எழுதிக்கொடுத்த க்ளினிக்குகள்ல எடுக்காம, நீர் எங்கேயோ போய் எடுத்துட்டு வந்திருக்கீறே? .....என் மச்சான் நாலு பேரோட க்ளினிக்குக்குப் போகாம நீர் வேற எங்கேயோ போனது அவனுகளுக்கு தெரிஞ்சா, அதோட ரிஸல்ட்டே வேற! அவனுங்க இதை என் வீட்டுக்காரிக்கிட்ட சொல்ல, அவ பத்ரகாளி மாதிரி ஆடி என்னை குதறி எடுத்துடுவா! என்று சொல்லி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்துவிட்டார்!
- கிரிஜா மணளன்
Thursday, May 8, 2008
ha...haa...haasyam: பல்வேறு பிரச்சனை .பல் வேறு பிரச்சனை
பல் டாக்டர்கள் எல்லோருமே நம்ம 'பல்ஸ்' ஸை பார்க்கறேன்னு, 'பர்ஸை;த்தான் பார்க்கறாங்க! கேவலம் ஒரு 'சொத்தை'ப்பல்லைப் பிடுங்கறதுக்கு டாக்டர்கிட்ட போனதுல, அந்த புண்ணியவாண், ஆறு மாசமா என்னை அலையவிட்டு, கடைசில என்னோட 'சொத்தை'யே பீஸா கேக்கற அளவுக்கு தன் 'மருத்துவ மகிமை'யைக் காட்டிவீட்டார்! பல் டாக்டர்களோட குறிக்கோளே.........DRILLING......, FILLING.........., கணிசமான ஒரு தொகைக்கு BILLING!
> கிரிஜா மணாளன்.
Wednesday, May 7, 2008
"கிரிஜானந்தா"வின் கிறுக்கு சிந்தனைகள்!============================================
1. துறவறம் பூண்ட சாமியார்களுக்கு 'சித்தி'யை அடைவதே குறிக்கோளாக இருக்கவேண்டும். தரிசனத்துக்காக பக்தர்களோடு வரும் அவர்களுடைய 'சித்தி'களை அல்ல!
2. ஆசைகளை ஒழித்தவர்களே 'சாமியார்' ராக ஆகவேண்டும். ஆசைகளை ஒளித்துவைத்துள்ளவர்கள் 'மாமியார்' வீட்டுக்கு (ஜெயில்)தான் போகவேண்டும்!
3. 'மடங்களுக்கும்' பெண்களுக்கும் இப்போதெல்லாம் அதிகத் தொடர்பு! ஏன்?.....பெண்களுக்கான 'நால்வகைப் பண்புகளில்' (அச்சம், நாணம், மடமை, பயிர்ப்பு) அவர்கள் 'மடம்' அதிகம் உள்ளவர்களாக இருப்பதால்தான்!
(சிந்தனைகள் தொடரும்)
Monday, May 5, 2008
Sunday, May 4, 2008
====================== டாக்டர் ஜோக் ================
டாக்டரிடம் போனார் ஒரு வாடிக்கை நோயாளி.
"டாக்டர்! நீங்க சொன்னபபடி தினமும் அதிகாலை வாக்கிங் போறேன்."
"ரொம்ப சந்தோஷம்!"
"வாக்கிங் போறபோது மனசு ப்ரீயா இருக்கும்னு சொன்னீங்க...எனக்கு அதுதான் இல்லே!"
"ஏன் அப்படி?"
"நான் கடன் வாங்கியிருக்கற அந்த ஈட்டிக்காரன் ரகுராம் சேட்டையும் அந்த ரோட்டுலேயே வாக்கிங் போகச் சொல்லியிருக்கீங்க......வட்டி பாக்கியைக் கேட்டு அவன் என்னை விரட்டிக்கிட்டு வர்றான்.. எனக்கு எப்படி மனசு ப்ரீயா இருக்கும்? முதல்ல அவனை வேற ஏரியாவுக்கு வெரட்டி விடுங்க டாக்டர்!"
- "உம்மணாமூஞ்சி"
தன் மகனுடைய வகுப்பு ஆசிரியரைப் பார்க்கப்போன ஒரு அப்பாவிடம் ஆசிரியர் சொன்னார்: "உங்க பையனோட கையெழுத்தைப் பார்த்தா, இன்னிக்கு பூராவும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்!" பையனின் அப்பாவுக்கு ஏக மகிழ்ச்சி! "அட! அவ்வளவு மணி மணியா எழுதறானா சார்?" என்று கேட்க, முகத்தைச் சுளித்தபடி ஆசிரியர் சொன்னார்:பார்த்துக்கிட்டே...........யிருக்கலாம்னுதானே சொன்னேன், பயலோட கையெழுத்து புரிஞ்சாத்தானே சார் மேலே படிக்கமுடியும்?"
எங்கள் தஞ்சாவூர் நகைச்சுவை மன்றத்தின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் உட்கார்ந்து, மிகவும் ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்த ஒருவரை உன்னிப்பாகக் கவனித்த நான், நிகழ்ச்சி முடிந்து அவர் அரங்கத்தைவிட்டு வெளியே செல்லும்போது, அவரிடம் நிகழ்ச்சியைப்பற்றி கருத்தை அறியலாமென்று அவரை நெருங்கினேன். அவரது முகத்தில் சோகலட்சுமி தாண்டவமாடிக்கொண்டிருந்தாள்!
"என்ன சார், உள்ளே அப்படி குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுக்கிட்டு இருந்தீங்க..... அதுக்குள்ளே இப்படி மூஞ்சியைத் தொங்கப்போட்டுக்கிட்டு வீட்டுக்குப் போறீங்களே?" என்று கேட்டேன்.
அவர் சொன்ன பதில்: "ம்...ம்....ம்...ம்...ம்...வூட்டுக்குப்போயி, என் வீட்டுக்காரி டீவி பாத்து முடிச்சு, எனக்கு ராத்திரி சாப்பாடு போடுற வரைக்கும் காத்துக் கெடக்கணுமே........என்னோட அந்த நெலைமையைப் புரிஞ்சுக்காம விசாரிக்க வந்துட்டீங்களாக்கும்!......போங்க சார்!"
(கவலையோடு வரும் மனங்களை நகைச்சுவை மருந்தால் குணப்படுத்தி, நாம் அனுப்பிக்கொண்டிருக்க, அவைகளை மீண்டும் நோயாளியாக்கும் இப்ப்படிப்பட்ட 'வைரஸ்' கிருமிகளை ஒழிக்க நாம் என்னசெய்வது?) - கிரிஜா மணாளன்.
Saturday, May 3, 2008
.........................அட்ஷய திரிதியை பற்றி ஒரு ஜோக்!.......................
(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்)
"உன் புருஷனை அரிச்சிக்கிட்டே இருந்தியே..அட்ஷய திரிதியைக்கு என்னதான் வாங்கினேடி?"
"ஹும், அந்த மனுஷரோட பிராணனைத்தான் வாங்க முடிஞ்சுது!"
....................................................................................................................................
அனுப்பியவர்: மங்களம் மைந்தன், திருவெறும்பூர், தமிழ்நாடு.
கணவன்மார்களுக்கு ஓர் எச்சரிக்கை!
ஆடி மாதம் துவங்கி, அடுத்த ஆடிவரை உங்கள் அருமந்தி.....ஸாரி....அருமந்த மனைவியின் ஆசையை நிறைவேற்ற நீங்கள் ஊரிலுள்ள துணிக்கடைகளுக்கெல்லாம் சோற்று மூட்டையுடன் 'சுற்றுலா" போவது போதாதென்று, உங்கள் பொறுமையையும், "பர்ஸையும்" சோதிக்கும் கஷ்ட காலமும் வந்துவிட்டது "அட்ஷய திரிதியை" என்ற பெயரில்! இது அவர்களுக்கு "பொன்னான காலம்" என்றால் ஆண்களாகிய நமக்கு "மண்ணாகும் காலம்". அடுத்த வீட்டுக்காரி அரை சவரன் வாங்கினால், தான் ஆறு சவரன் வாங்கி ஆட்டிக்கொண்டு அலைய நினைக்கும் ஆசைபிடித்த பெண் ஜென்மங்கள் மனைவிகளாக வாழும் யுகம் இது! மனைவி உங்களிடம் "அட்ஷய திரிதியை அன்னிக்கு தங்கம் நம்ம வீட்டுக்கு வந்தா, லட்சுமி கடாட்சம் பொங்குமுங்க!" என்று உங்களுக்கு தூபம் போட்டால், மசியவேண்டாம். "நீயே எனக்கு தங்கம் தானேடி! நீயே இந்த வீட்டுக்கு லட்சுமிதானேடி!" என்று "சோப்பு போட்டு" பாருங்கள். மசிந்தால் அது உங்கள் அதிர்ஷ்டம்....இல்லையேல் அது உங்கள் தலையில் அந்த ப்ரம்மா ஸ்ட்ராங்கா எழுதி வச்ச தலையெழுத்து!
> அப்பாவிக் கணவண்மார்களின் மனநலம் காக்கும் இரக்கசிந்தனையுடன் இந்த அறிவுரையை வழங்குபவர்.... > கிரிஜா மணாளன்.
Friday, May 2, 2008
ஆறிப்போனா நல்லா இருக்காதுங்க!
(ஒரு டெலிபோன் உரையாடல்)
"அலோ!..... கூடுவாஞ்சேரிலேயிருந்து குப்புசாமி பேசறேன்......என் பையனுக்கு உங்க பொண்ணைப் பாக்க இன்னிக்கு வர்றாதா சொல்லியிருந்தோமுல்ல, எத்தனை மணிக்கு நாங்க வரலாம்?"
"பொண்ணு ஆபீஸ்லேயிருந்து 6 மணிக்கு வருவாள்ங்க. நீங்க 7 மணிக்கு வாங்களேன்!"
"சரி........டிபன் ரெடி பண்ணிட்டீங்களா?"
"அதெல்லாம் அப்பவே ரெடி ஆயிட்டுதுங்க!"
"ரொம்ப சந்தோஷம்!....அப்ப ஒண்ணு பண்றோம்......இப்ப உங்க வீட்டுக்கு வந்து டிபனை முடிச்சிக்கிட்டு வேற ஒரு இடத்துக்கு போயி ஒரு பொண்ணைப் பாத்துட்டு வந்துடுறோம்....உங்க பொண்ணு மெதுவா வரட்டும்........நம்ம பொண்ணை எப்பவும் பாத்துக்கலாம், ......டிபன் ஆறிப்போயிட்டுதுன்னா அவ்வளவு நல்லா இருக்காதுங்களே!"
"டொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்"
- கிரிஜா மணாளன்.
Thursday, May 1, 2008
=========================
எங்கள் நகைச்சுவை மன்ற நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லா உறுப்பினர்களும் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருந்தபோது, முன் வரிசையில் இருந்த ஒருவர் மட்டும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் 'கம்'மென்று உட்கார்ந்திருந்தார். மேடையில் நகைச்சுவை வழங்கிக்கொண்டிருந்தவரோ ஓர் பிரபலமான நகைச்சுவையாளர். அவர் பேச ஆரம்பித்தாலே அரங்கமே சிரிப்பலைகளால் அதிரும். அப்படியிருக்க, இவர், அதுவும் மேடையின் முன்னால் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர் மட்டும் ஏன் இப்படி? அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரை இது பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார்:"அவர் பக்கத்து சீட்ல குண்டா, கறுப்பா ஒரு லேடி உக்காந்திருந்தாங்களா சார்?"" ஆமாம்!"'அதுதான் காரணம்! அது அவரோட மனைவி சார்! அந்த அம்மா முன்னால அவர் வாய் திறக்கவே பயப்படுவார். அவரோட கண்ட்ரோல் சுவிட்ச்சே அந்த அம்மாதான்!.......வீட்டுல டாய்லெட் போறதுக்குக்கூட மனைவிக்கிட்ட பர்மிஷன் வாங்கிக்கிட்டுத்தான் போவார்னா பாத்துக்குங்களேன்!"(அடப்பாவிகளா! மனுஷப்பிறவிக்கு மட்டுமே கடவுள் கொடுத்திருக்கற அந்த 'சிரிப்பு'ங்கற சொத்தை, மனைவிகள்கிட்ட 'அடகு' வச்சிட்டீங்களே!)
- கிரிஜா மணாளன்
(இதனால்தான் நான் நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு போகும்போது என் வீட்டுக்காரியையும் அழைச்சிக்கிட்டுப் போறதில்லே!.........ஒவ்வொரு தடவையும் பர்மிஷன் வாங்கிக்கிட்டு சிரிக்கறது எனக்குப் பிடிக்காத விஷயம் சார்)
Wednesday, April 30, 2008
உங்களை எதுக்கு சிரிக்கச் சொல்றோம்னா...........
உடம்புல இருக்கற உறுப்புக்களை ஆரோக்கியமா வச்சிக்கிறதுக்காக நாம் தினமும் உடற்பயிற்சி செய்யறோம். ஜிம்முக்குப் போறதும், அப்படி வசதியில்லாதவங்க வீட்டுலேயே கையக் காலை ஆட்டியும், தண்டால், பஸ்கி எடுத்து மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க நிக்கறதும், வாக்கிங் போறேன்கற பேர்ல தெருத் தெருவா நடக்கறதும் உடற்பயிற்சிதான். இதுகளோட, தினமும் கொஞ்சநேரம் வாய்விட்டு சிரிக்கறதையும் ஒரு உடற்பயிற்சியாய் பண்ணிப்பாருங்க. நகைச்சுவையைக் கேட்டு ரசிச்சி சிரிக்கறது ஒரு அருமையான உடற் பயிற்சிங்கறதை மறந்துடாதீங்க! நம்ம உடம்புல ஏற்படுற காயங்கள், ரணங்கள் இதுகளை ஆறச்செய்றதுக்குன்னு 'நியூரோபேப்டைட்ஸ்' என்கிற திரவம் சுரந்துக்கிட்டே இருக்கும். இந்த திரவத்தை அதிகமா சுரக்கச்செய்ற ஆற்றல் 'சிரிப்பு'க்கு இருக்கறதா மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. மனசுல இறுக்கம், கவலை, படபடப்பு, நடுக்கம் இதுகள் ஏற்படறது நம்ம உடம்புல சேருற low density lippo ப்ரோட்டீன்கள்'களால் தான். நாம் வாய்விட்டுச் சிரிக்கும்போது, இந்த L.D.L. ப்ரோட்டீன்கள்' இயல்பு நிலையை அடைவதால், மனசு ரிலாக்ஸ் ஆகி, படபடப்பு, நடுக்கம் இதுகள் இருந்த இடம் தெரியாம ஓடிவிடும்! இதயமும் ரத்த ஓட்டத்தால் சீரடைந்து, அதனல் உள்ளுறுப்புக்கள் எல்லாமே சீரா வேலை செய்ய ஆரம்பிச்சுடும்! வாய்விட்டுச் சிரிக்கிறது, உள்ளுறுப்புக் களைச் சீராக வச்சுக்க நம் செய்ற 'ஜாகிங்' மாதிரின்னும் சொல்றாங்க மருத்துவ விஞ்ஞானிகள். அதனாலதான், சிரிங்க, சிரிங்க, நல்லா வாய்விட்டுச் சிரிங்க, அந்த சான்ஸ் இலவசமா கிடைக்கறதுக்கு அடிக்கடி ஹ்யூமர் க்ளப் நிகழ்ச்சிகளுக்குப் வாங்கன்னு எல்லாரையும் அழைக்கிறோம். புரியுதுங்களா? இதைப் படிச்சுட்டு, ஏதோ லேசா ஒரு ஸ்மைல் பண்ணிட்டு பேசாம இருந்துடாதீங்க! சிரிப்பு'ங்கறது உங்களுக்கு இலவசமா கிடைக்கற ட்ரீட்மெண்ட். அதைத் தேடிப்போறதுல அசட்டையா இருந்தா, உங்க உடம்புல இருக்கற உறுப்புகளும் தம் கடமையை அசட்டை பண்ணி.................அப்புறம் என்ன ஆகும்னு உங்களுக்கே புரியுதுதானே?
"வாய்விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப்போகும்"கறது வெறும் அடுக்குமொழி வாக்கியம் மட்டுமில்லே, அதை மறந்துடாதீங்க!
கிரிஜா மணாளன் ... தஞ்சை தாமு
Humour Club Of Thanjavur
Tamilnadu, South India.
சுறுசுறுப்பான மாணவர்கள்!
ஒரு கல்லூரிப் பேராசிரியரைக் கடத்திக்கொண்டுபோன கும்பலிடமிருந்து அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு போன் வந்தது. "டேய் பசங்களா! உங்க புரொபசரை உயிரோட கொண்டுவந்து விடணும்னா, 5000 ரூபாயை நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க கொண்டுவந்து தரணும்!இல்லேன்னா .....அவரை பெட்ரோல் ஊத்தி எரிச்சிடுவோம்! புரியுதா? என்ன பசங்களா, கொண்டு வர்றீங்களா?" என்று சொல்லி வரவேண்டிய இடத்தையும் சொன்னார்கள்.
அடுத்த அரைமணி நேரத்தில் கல்லூரி மாணவர்கள் அத்தனை பேரும் அவசரம் அவசரமாக தத்தம் வண்டிகளில் விரைந்தார்கள் .......கையில் ஆளுக்கொரு பெட்ரோல் டின்னுடன்!
(ஆர். ராஜ்குமார், திருவெறும்பூர், தமிழ்நாடு)
Tuesday, April 29, 2008
==========================
சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது சத்தியத்தின் பிறப்பிடம். படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது அறிவின் ஊற்று. உழைப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது வெற்றியின் விலை. நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது மகிழ்ச்சிக்கு வழி. சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது இதயத்தின் இசை!
எனவே, உங்கள் இதய அரங்கத்தில் எப்போதும் சிரிப்பின் அலைகள் மிதந்து கொண்டேயிருக்குமாறு, நீங்கள் உங்கள் நகைச்சுவை உணர்வைப் பெருக்கிக் கொண்டால் அங்கு எந்த இறுக்கங்களும், கவலைகளும் உட்புகாது. எப்போதும் சிரித்தமுகமே எல்லோருக்கும் பிடித்த முகம்! சிரிப்போம்! சிறப்போம்!
"மனம்விட்டு சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்...அது ஆத்மாவின் இசை! நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்.... அது மகிழ்ச்சிக்குச் செல்லும் பாதை!"
....இது ஐரீஷ் நாட்டு தேசிய கீதத்திலுள்ள வரிகள்.
(மீண்டும் சந்திப்போம்)
அன்புள்ள வாசகர்களுக்கு, வணக்கம்.
முற்றிலும் நகைச்சுவைக்கே முதலிடம் அளித்து இணைய வாசகர்களை மகிழ்விக்க ஓர் வலைப்பதிவைத் துவங்கவேண்டும் என்ற எனது நீண்ட கால ஆவலுக்கு வித்திட்ட திருமதி கோமதி நடராஜன் அவர்களுக்கு முதற்கண் எனது நன்றி. 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டின் அனைத்து இதழ் களிலும் நகைச்சுவை வழங்கி நான் பெற்ற அனுபவங்கள் இந்த வலைப்பதிவு முயற்சிக்கும் உதவி, வாசகர்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஒத்துழைப்பை வேண்டி, இந்த வலைப்பதிவில் நுழைகிறேன். வணக்கம்.
> கிரிஜா மணாளன்.