Monday, June 29, 2009

பிஷ்டாசீர்வாதம்!

பிஷ்டாசீர்வாதம்!
===============

முகூர்த்த நேரம் நெருங்க எல்லோரும் கையில் அட்சதையோடு. போட்டோ, வீடியோக்காரர்கள் எல்லோரும் மேடையில் மணமக்களை "கவர்" பண்ண, தயாராகிறார்கள். மாங்கல்யம் அணிவிக்கத் தயாராகி, கெட்டி மேளம் முழங்கு கிறது. மேடைக்குக் கீழே சபையிலிருந்தோர் “வீசி எறியும்” 'அட்சதை"யில் ஒரு அரிசிகூட மணமக்கள் தலையில் போய் விழுவதில்லை! ஆமாம், தம் கடமையில் கண்ணாயிருந்த புகைப்படக்காரர்களின் "பின்பகுதி"யில் எல்லாம் போய் விழுந்து, தெறித்து ஆசீர்வாதம் செய்கின்றன!
முகூர்த்த நேரத்தில் இப்படி எல்லோருடைய "அட்சதை ஆசீர்வாத"ங்களையும் பெறும் “பேறு பெற்றவை” புகைப்படக்காரர்களின் "பின் பகுதி"களே..என்ற உண்மை நமக்குப் புலனாகிறதல்லவா!
==================

"வாய்க்கொழுப்பு!"
==================
சில மனைவிகளின் உடம்பிலுள்ள 'கொழுப்பில்', 90% 'வாய்க்கொழுப்பு'தான் என்று 'அகில உலக அப்பாவிக் கணவன்மார்கள் கூட்டமைப்பு' எடுத்த ஆய்வு கூறுகிறது.
அதற்கு சில எடுத்துக்காட்டுகள்!
------------------------------------------------------------------------------------
(கணவன் - மனைவி உரையாடல்)

"துவையல்..'மிக்ஸில வேணாம்டி!......'அம்மி'ல வச்சு அரைச்சாத்தான் 'டேஸ்ட்'டா இருக்கும்!"
"ம்...ம்...ம்...ருசி கேக்குற உங்க நாக்கத்தான் அம்மில வச்சு அரைக்கணும்!"
-----------------------------------------------------------------------------
"இன்னிக்கு சனிக்கிழமையாச்சே........நீ ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போகலையா?"
"ம்....ம்....ம்..எதுக்கு? .....இங்கதான் தினமும் உங்க மூஞ்சிய பாக்கறேனே!"
=======================================================

- கிரிஜா மணாளன்

சமுதாய ஒப்பாரி! (நகைச்சுவை)

எங்கள் “கூகுள் - அன்புடன் குழும”த்தில் உறுப்பினர்கள் பங்கு பெறும் நகைச்சுவைப் பகுதிகளில் “சமுதாய ஒப்பாரி” என்னும் ஓர் பகுதி உண்டு. இப்பகுதியில் அனைவரும் சமுதாய அவலங்கள் பற்றி தங்கள் கற்பனையில் “ஒப்பாரி” பாடலாம். சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா, தன் சோகத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைத்த 'ஒப்பாரி' பாடல் இது.


துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............

மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......

கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......

மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுக்கப் பாக்குறீக....!

கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!

உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?

பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்!

தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!

முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!

பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
============================

பாடல் : கிரிஜா மணாளன்
========================